பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

முஸ்லிம்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு


முஸ்லிம்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு:
தொல்லியல்துறைக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, பிப்.1-

தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத முஸ்லிம்களுக்கு அனுமதி மறுத்ததற்காக அந்தத் துறைக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஐகோர்ட்டு கிளையில் நல்லா முகமது என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிராகரிப்பு

தொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்', `கிïரேட்டர்' (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான், 4 பதவிக்கும் விண்ணப்பித்தேன். கிïரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தேர்வில் கலந்துகொள்ள முடியாதபடி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் தேர்வு

நான் இந்து மதத்தை சேராதவர் என்பதால் எபிகிராபிஸ்ட் உள்ளிட்ட 3 பணிகளை வழங்க முடியாது என்றும், கிïரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் காரணம் கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.11.09 அன்று பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நிராகரிப்பு ஏன்?

இந்த மனுவுக்கு பதில்மனுவை தாக்கல் செய்த தொல்லியல்துறை, தொல்லியல்துறையில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் அந்தப் பதவிக்கு அவரை ஏற்கவில்லை. கிïரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.

ஒதுக்க முடியாது

இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தொல்லியல்துறை, இந்து சமய துறையின் கீழ் வருவதல்ல. அங்கு சில பணிகளுக்குத்தான் இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. எனவே தொல்லியல் பணிகளை இந்துக்களுக்குத்தான் என்று மதத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.

முன்கூட்டியே தெரிவிக்கவில்லை

கிïரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவிக்காமல், பிறகு அந்த காரணத்தை கூறி விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை பிரதிவாதிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக